பள்ளிவாசல் நிர்வாகிகளே, மௌலூது பள்ளிவாசல்களில் பாடப்படுவதை தடை செய்யுங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்….)

அன்புக்குரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு,

இந்த மடல் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரில் சில பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் என்ற பெயரில் பல பாடல்கள் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், இறைவனது திருப்தியைப்பெறும் நோக்கத்தில் ஓதப்படும் மவ்லூதுகளினால் இறைவனது கோபப்பார்வைதான் ஏற்படுகின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

”பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில்) அவனைவிடுத்து வேறுயாரையும் அழைக்காதீர்கள்” (அல்குர்-ஆன் 72:18) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை புறந்தள்ளும் விதமாகத்தான் நபிகள் நாயகத்தை அழைத்து பாடப்படும் மவ்லூது வரிகள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் அவர்களை இறைவனுடைய நிலைக்கு உயர்த்தும் பாடல்வரிகளும் இதில் ஏராளமாக உள்ளன.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன் 5:72). எனவே இத்தகைய மாபாதக இணைவைக்கும் காரியத்தை விட்டு நாம் விலகவேண்டும்.

மேலும், இத்தகைய இணைவைப்பு காரியங்களை ஏகத்துவ மையமாக திகழ வேண்டிய பள்ளிவாசல்களில் ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இத்தகைய இணைகற்பிக்கும் மாபாதக செயல்களை உங்களது பொறுப்பில் பள்ளிவாசல்களில் செய்ய அனுமதியளிப்பீர்களேயானால் அல்லாஹ் இது குறித்து உங்களிடம் விசாரிப்பான். ஏனெனில், நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்:

”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)

எனவே, இணைவைக்கும் பெரும்பாவத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும் மவ்லூது, மற்றும் இது போன்ற பாவங்களான தர்கா, தட்டு, தகடு, தாயத்து, போன்ற இணைவைப்பு செயல்களையும், மற்றும் நம்மை வழிகெடுக்கும் பித்அத்களையும் (மார்கத்தின் பெயரால் புதிதாக புகுத்தப்படும் அனாச்சாரங்களையும்) உங்களது பொறுப்பின் கீழ் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் அனுமதிக்காமல் தடைசெய்யும் படி உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இத்தகைய செயல்களை இனிமேலும் நீங்கள் அனுமதித்தால் உங்களது பொறுப்பின் கீழுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வழிகெடுத்த பாவத்தையும் நீங்கள் சேர்த்து சுமக்க நேரிடும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.