கோபக்காரக் கணவனை சமாளிப்பது எப்படி?

மவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ  .      கணவன் நற்குணம் கொண்டவனாக இருந்து விட்டால் அந்தப் பெண் பெரும் பாக்கியசாலி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ‘ஒருவர் உங்களிடம் பெண் கேட்கின்றார். அவரது மார்க்க ஒழக்கமும், குணமும் உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் அவருக்கு உடனடியாக உங்கள் பெண்ணை மணமுடித்துவிடுங்கள்’ என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆண்மகனிடம் - மணமகனிடம் நாம் எதிர்பார்க்க வேண்டிய மிக முக்கியமான பண்புகள் மார்க்க ஒழுக்கமும், நற்குணமும்தான் என்பதை உணரமுடியும்.

கோபமுள்ள கணவன்மார்களைப் பெற்ற இல்லத்தரசிகள் தங்கள் வாழ்வை இனிமையானதாக ஆக்கிக்கொள்ள மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கலாம்.

ஒன்று தமது குணத்தை அழகாக்கிக் கொள்வது. இரண்டு, மார்க்க அறிவைப் பெருக்கிக் கொண்டு தம் கணவருக்கு அடிக்கடி நல்லுபதேசம் செய்து அதன் மூலம் திருத்த முயற்சித்தல். மூன்று, வல்ல ரஹ்மானிடம் தம் கணவரின் நற்குணத்திற்காக பிரார்த்திப்பது. இம்மூன்றின் மூலம் எவ்வளவு கோபமான கணவனையும் சமாளித்து விடலாம்.
நல்ல மனைவிக்குரிய இலக்கணத்தைச் சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவளது கணவன் அவளைப் பார்த்தால் அவனுக்கு அவள் மகிழ்ச்சியூட்டுவாள். அவன் அவளுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் உடனே கீழ்ப்படிவாள். அவன் அவளை விட்டு வெளியே சென்றுவிட்டால் தனது கற்புக்கும் அவனது உடமைகளுக்கும் காவலாக இருப்பாள்’ என்று கூறினார்கள்.

இந்த அற்புதமான மணிமொழியை ஒரு பெண் நடைமுறைப்படுத்தினால் எவ்வளவு கொடிய கணவனாக இருந்தாலும் நிச்சயம் திருந்திவிடுவான் என்பது நிதரிசனமான உண்மையாகும். (ஊருக்கும் உலகத்திற்கும் பெரிய ரவுடியாக, எல்லோரும் பயப்படக்கூடிய ஆளாக இருக்கும் சிலர் தனது மனைவியிடம் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போவதை மிகவும் எதார்த்தமாக அன்றாட நடைமுறையில் காணத்தானே செய்கிறோம்!)

ஸலாம் கூறுங்கள்
கணவன் வீட்டுக்குள் வந்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையில் நடந்து கொள்வது நல்ல மனைவியின் நற்பண்பு மட்டுமல்ல, கெட்டகணவனைத் திருத்துவதற்கும் சிறந்த வழிகாட்டலாகும்.

இல்லத்தரசிகளே! கணவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருங்கள். அவன் வந்தவுடன் அகமும் முகமும் மலர்ந்து அன்புடன் வரவேற்புக் கொடுங்கள். வந்ததும் வராததுமாக வீட்டின் குறைகளையும் பிள்ளைகளின் குற்றங்களையும் உடனே எடுத்துரைக்காதீர்கள். வீட்டுக்குள் நுழையும் கணவன் ஸலாம் சொன்னால் புன்னகையுடன் பதில் ஸலாம் கூறுங்கள். இல்லையென்றால் நீங்களே முந்திக்கொண்டு ஸலாம் சொல்லுங்கள். உங்கள் ஸலாம் அவரை அமைதிப்படுத்த உதவும்.

'உங்கள் மீது சாந்தியும், சமாதானமும், இறைவனின் அருளும் அபிவிருத்தியும் உண்டாகட்டும்' என்ற அழகிய பொருளைக்கொண்ட ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’ எனும் ஸலாம் அவரை நிச்சயம் அமைதிப்படுத்தாமல் இருக்காது.
உடனே மறுப்பு வேண்டாம்!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அடுத்த போதனைப்படி கணவனுடைய கட்டளை எதுவாயினும் அது உங்களுக்குப் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை உடனே செயல்படுத்துங்கள். இதுவும் கணவனின் கோபம் குறைந்து அன்பு பெருக வழி வகுக்கும். கணவனின் கருத்துக்கு மதிப்பளிப்பது இதற்கு முதற்படியாகும். கணவன் என்ன சொன்னாலும் முதலில் அதை ஆமோதித்து விடுங்கள். அவர் சொல்லி முடித்த பிறகு அது பற்றிய உங்கள் கருத்தை அமைதியாக எடுத்துக் கூறுங்கள். சூழ்நிலையறிந்து, சுற்றம் புரிந்து செயல்படுங்கள்.
ஒரு பெண் தமது அன்பான நடவடிக்கையினால் தமது அழகிய குணத்தால் எந்தக் கணவனையும் வெல்ல முடியும்.
நல்லுபதேசம்
மார்க்க ஞானம் கற்ற பெண்ணாக இருந்தால் அந்த ஞானத்தை வைத்து கணவனைத் திருத்துவதும் சுலபமே. கடும் கோப குணம் கொண்டிருந்த முரடரான உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை திருக்குர்ஆனின் வசனங்கள்தானே திருத்தின! அதே வசனங்களும், அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு மொழிகளும் எந்த மனிதரையும் மாற்ற வல்லவை என்பதில் ஏது ஐயம்?
இமாம் பாகிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அடிமைப்பெண் ஒருத்தி அவர்களின் மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வரும்போது கால் இடறிக் கீழே விழுந்தாள். கை நழுவிய குழந்தை படிக்கட்டுகளில் உருண்டு உருண்டு கீழே வந்தது. இமாம் அவர்கள் ஓடிப்போய்த் தூக்கினார்கள். ஆனால் அக்குழந்தையின் உயிர் பிரிந்திருந்தது. இமாம் அவர்கள் கடுமையான கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். அந்த அடிமைப்பெண் உடனே திருக்குர்ஆனின் வசனமொன்றை ஒத ஆரம்பித்தார். பயபக்தி மிக்கோரின் பண்புகளைப் பட்டியலிட்டுக் கூறும் வசனம் அது.

‘அவர்கள் இன்பத்திலும், துன்பத்திலும், வளமான நிலையிலும், வறுமையான நேரத்திலும் தாராளமாகச் செலவு செய்வார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மனிதர்களை மன்னிப்பார்கள். அத்தகைய உபகாரிகளை அல்லாஹ் நேசிக்கின்றான்’ என்பது அந்த வசனத்தின் கருத்தாகும். கடும் கோபத்தில் இருந்த இமாம் அவர்களின் செவியில் இந்த வசனம் விழுந்ததுதான் தாமதம்! மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் அப்படியே சினத்தை விழுங்கினார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னார்கள், ‘அடிமைப்பெண்ணே! உன்னை நான் மன்னித்தேன். உன் மீது ஏற்பட்ட கோபத்தை மென்று விழுங்கி விட்டேன். உன்னை அடிமைத்தளையிலிருந்து நீக்கி உரிமை விட்டு விட்டேன். அல்லாஹ் என்னை நேசிப்பானாக’.

துஆ - பிரார்த்தனை தான் இறுதி ஆயுதம்
இது போன்ற சந்தர்ப்பங்களில் மார்க்க ஞானம் கற்றவளாக இருந்தால் அந்தப் பெண், தனது கணவனின் கோபத்தை சமாளித்திட இயலும். இதற்கும் அவன் அசைந்து கொடுக்காதவனாக இருந்தால், அப்பொழுது அல்லாஹ்விடம் அழுது துஆ செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

முரண்டு செய்யும் மனைவியைத் திருத்த மூன்று வழிகளைக் கற்பித்த வான்மறை குர்ஆன், தானாகத் திருத்த முடியாத சூழ்நிலையில் இரு குடும்பத்தையும் சார்ந்த நடுநிலையாளர்களை வைத்து சமாதானம் செய்யுமாறு கட்டளையிடுகின்றது. அது கணவன் விஷயத்தில் மனைவிக்கும் பொருந்தும். தமது நற்குணத்தினாலும், அழகிய உபதேசத்தாலும், அற்புத துஆவினாலும் கணவனைத் திருத்த முடியாது போனால் இரு குடும்பத்தையும் சார்ந்த பெரியவர்களை வைத்து சமாதானம் செய்விக்க முயற்சிக்க வேண்டும்.

இல்லறம் சிறக்க....
அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் முன்னிருத்தி வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது கோபக்காரக் கணவனும் முரண்டு செய்யும் மனைவியும் தத்தமது நடவடிக்கைகளில் நிதானத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் வாழ்ந்த வாழ்வில் மிக்க அழகிய முன் மாதிரி ஏராளமாக அமைந்துள்ளன. அதை நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்டு இல்லறத்தை நல்லறமாக்கிட முயல்வோம். அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.